வியாசர்பாடி கல்லூரி மேம்படுத்தப்படும்: என்.ஆர்.தனபாலன் உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தினசரி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று தொகுதிக்கு உட்பட்ட எம்.ஆர்.நகர் மார்க்கெட் பகுதி, பவானி அம்மன் கோயில் தெரு சிட்கோ, தண்டையார்பேட்டை ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, எருக்கஞ்சேரியில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் என்.ஆர்.தனபாலன் காலை சிற்றுண்டி அருந்தினார்.

இதையடுத்து அவர் பேசுகையில், ‘பெரம்பூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கழிவுநீர் கால்வாய்கள் நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியை பட்ட படிப்புகளும், பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கும் வகையில் தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடுங்கையூர் பகுதியில் சிறு, குறு தொழில் நடத்துபவர்களுக்கு வங்கிக்கடன் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: