கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடல் சர்ச்சை விவகாரம்.: நடிகர் தனுஷ்-க்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் நடிகர் தனுஷூக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியானது. அதனையடுத்து அந்த பாடலை நீக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் அந்த வழக்கை தொடர்ந்தார். அப்போது அந்த மனுவில் அவர் தெரிவித்தது, கடந்த ஜனவரி 19-ம் தேதி கர்ணன் திரைப்படத்தின் டீஸர் மற்றும் கண்டால் வர சொல்லுங்க பாடல் வெளியிடப்பட்டது. அதனை அடுத்து பண்டாரத்தி புராணம் என்ற பெயரிலும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சக்காளத்தி என்ற வரிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஆண்டிப்பண்டாரம் என்பது பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகம். பண்டாரம் என்ற பெயரிலும் யோகேஸ்வரர் என்ற பெயர்களிலும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள். கோவில்களில் பூ அலங்காரம் செய்பவர்களில், பெரும்பாலானோர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களை காயப்படுத்தும் விதமாக இந்த பாடல் இடம்பெற்றுள்ளது விதிமுறைகளுக்கு எதிரானது.

எனவே இந்த பாடலுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். யூடியூப் சேனல் மற்றும் திரைப்படத்தில் இருந்து இந்த பாட்டை நீக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார். இதனையடுத்து ஐகோர்ட் கிளை விளக்கம் கேட்டு திரைப்பட தணிக்கை துறையின் மண்டல அலுவலர், படத்தின் இயக்குனருக்கு மாரி செல்வராஜ், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது.

இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணைக்கும் வந்த போது நடிகர் தனுஷூ-யிடம் விளக்கம் கேட்டு உயர்நிதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேலும் விருதுநகரை சேர்ந்த ராஜா பிரபு என்பவர் தொடர்ந்த வழக்கை ஏப்ரல்.24-ம் தேதிக்கு  ஐகோர்ட் மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: