விபத்து நஷ்டஈடு வழங்காததால் பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி

பெரியகுளம்: அரசு பஸ் மோதிய விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் பெரியகுளத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஜப்தி  செய்யப்பட்டது. பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சேக் இப்ராகிம்(48). இவர் கொடைக்கானலில் டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு  பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சேக்இப்ராகிம் மீது அரசு பஸ் மோதியது. இதில் சேக் இப்ராகிம் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உயிரிழந்த சேக் இப்ராகிம் குடும்பத்தினர், பெரியகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த  மாவட்ட கூடுதல் நீதிபதி திலகவதி, விபத்தில் இறந்த சேக் இப்ராஹிம் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சத்து 72 ஆயிரத்து 634 வாங்க  கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால், விபத்து இழப்பீடு இதுவரை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் அமீனா ரமேஷ் தலைமையில் வக்கீல் ராஜா முகமது ஆகியோர் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே  சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.  அந்த பஸ்சிலிருந்த பயணிகளை மாற்று பஸ்சில் கண்டக்டர் அனுப்பி வைத்தார்.

Related Stories: