வன்னியர் உள் ஒதுக்கீடு எதிர்த்து மேலும் 2 வழக்குகள் தாக்கல்: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

மதுரை: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தாக்கல் செய்த மேலும் இரு மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த மனோகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து, வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 68 சமூகங்களைக் கொண்ட சீர்மரபினருக்கு 7 சதவீதமும், மீதமுள்ள 40 சமூகங்களுக்கு 2.5 சதவீதமும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பல சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையான ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கத் தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதம் என்பதால் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், சுரேஷ் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், இந்த மனுக்களின் மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Related Stories: