கீழக்கரை: ஏரான்துறையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், புனிதநீராட பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஏர்வாடி அருகே ஏரான்துறை கடற்கரையில், மாயாகுளம், சின்ன மாயாகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக புனித நீராட கூடிய இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிற்கு கடல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்தது. இதனால் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பனை, தென்னை மரம் அனைத்தும் வேரோடு சாய்ந்து கடற்கரை ஓரத்தில் கிடக்கின்றன.