புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் கால் இறுதியில் சவுராஷ்டிரா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி அரை இறுதிக்கு முன்னேறியது. பாலம் ஏ மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. அவி பரோட் 37, ஸ்நெல் படேல் 30, விஷ்வராஜ் 53 ரன் எடுத்தனர். சமர்த் வியாஸ் 90 ரன் (71 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), சிராக் ஜனி 53 ரன்னுடன் (38 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 41.5 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து அபாரமாக வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 75 ரன் (104 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். கேப்டன் பிரித்வி ஷா 185 ரன் (123 பந்து, 21 பவுண்டரி, 7 சிக்சர்), ஆதித்யா தாரே 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.