புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் அடுத்த மாதம் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. பிளே ஆப் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டி (மே 30) அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.