டாலர் கடத்தல் பற்றி விசாரணை கேரள சபாநாயகருக்கு சுங்க இலாகா நோட்டீஸ்

திருவனந்தபுரம்: டாலர் கடத்தல் வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன், வரும் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு  சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சொப்னா தலைமையிலான கும்பல் இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளனர். இதுதொடர்பாக என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் வழக்கில் சுங்க இலாகா நடத்திய விசாரணையில், சபாநாயகர் ராமகிருஷ்ணனுக்காகவும், சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது ெதரியவந்தது. இதையடுத்து சபாநாயகரின் உதவியாளரிடம் சுங்க இலாகா விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில், முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் ராமகிருஷ்ணன் மற்றும் 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொப்னா சுங்க இலாகாவுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாலர் கடத்தல் வழக்கில் வரும் 12ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு  ேகரள சபாநாயகர் ராமகிருஷ்ணனுக்கு சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடியேரி பாலகிருஷ்ணன் மனைவிக்கும் சிக்கல்

கேரள அரசு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு லைப் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வழங்கி வருகிறது. இதன்படி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதற்கு துபாயை சேர்ந்த ‘‘ரெட் கிரசன்ட்’’ என்ற நிறுவனம் பல கோடியை நன்கொடையாக வழங்கியது. இந்த நிறுவனத்துக்கும், முன்னாள் அமீரக துணைத்தூதர் ஜாமல் அல்சாபிக்கும் தொடர்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை கேரளாவை சேர்ந்த ‘‘யூனிடெக்’’ என்ற நிறுவனம் கட்டி வருகிறது.

இந்நிலையில், யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஈபன், 4 விலையுயர்ந்த ஐபோன்களை சொப்னாவுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சுங்க இலாகா நடத்திய விசாரணையில், ஒரு ஐபோனை மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த நிலையில் அதில் மற்றொரு ஐபோன் மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மனைவி வினோதினி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த ஐபோனின் விலை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபாயாகும். தங்க கடத்தல் விவகாரம் வெளியே வரும்வரை இந்த போனை வினோதினி பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அதில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டையும் சுங்க இலாகா கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் வினோதினியிடம் விசாரணை நடத்த, வரும் 10ம் தேதி கொச்சியில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: