இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 7 ஆயிரம் பேரிடம் ரூ85 கோடி மோசடி செய்த 2 பேர் கைது: 6 பேருக்கு வலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி 7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி மோசடி செய்த இரண்டு பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணுலிங்கம். இவர் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விநாயகபுரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன், அவரது மனைவி பிரபாவதி மற்றும் மஞ்சுளா, கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். அதில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதத்தில் ரூ.90 ஆயிரம் வழங்கப்படும். ரூ.2லட்சம் செலுத்தினால் ரூ.3.60 லட்சம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். இதனை நம்பிய நான் (மண்ணுலிங்கம்) எனக்கு தெரிந்த 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டினேன். திண்டிவனத்தில் உள்ள அலுவலகத்தில் இந்த பணத்தை கட்டினேன். இந்த நிலையில் மாயகிருஷ்ணன் நடத்தி வந்த அலுவலகம் திடீரென பூட்டு போட்டுக் கிடந்தது. மேலும் அவர்கள் தலைமறைவானதாக தகவல் பரவியது. அதன்பிறகே இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களைப் போன்று சுமார் 7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி வரை பெற்றுக் கொண்டு அக்கும்பல் தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதனிடையே தலைமறைவாக இருந்த வீரமணி (46), செந்தில்குமார் (39) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று திண்டிவனத்தில் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்….

The post இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 7 ஆயிரம் பேரிடம் ரூ85 கோடி மோசடி செய்த 2 பேர் கைது: 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: