பொன்மலை ரயில்வே இடத்தில் கொட்டப்படும் கோழி கழிவுகள்-துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

திருச்சி : பொன்மலை ஜி.கார்னரிலிருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை அடுத்து ரயில்வே இடம் உள்ளது. சுப்பிரமணியபுரம் பகுதியில் கோழிக்கடை நடத்தி வருபவர்கள் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் தங்கள் கடைகளில் குவியும் கோழி இறைச்சிக் கழிவுகள், கோழி இறகுகள் போன்றவற்றை ரயில்வே இடத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இந்த கழிவுகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் தினந்தோறும் கடும் அவதியடைகின்றனர். மூக்கைப்பிடித்துக் கொண்டுதான் அந்த இடத்தை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்தால் பலர் குமட்டல், வாந்தி போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பொன்மலை கோட்ட அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது பற்றி புகார் தெரிவித்தபோது, அது ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடம். நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்கின்றனர். ஆர்பிஎப் போலீசாரும் ரோந்து மேற்கொண்டு, கோழி இறைச்சி கொட்ட வந்த வாகனங்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர். ரயில்வேக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு. அதை தட்டிக்கழிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பேசுவது ஏற்புடையது அல்ல. மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Related Stories: