மும்பையில் நடிகை டாப்சி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை: இயக்குனர் அனுராக் காஷ்யப் வீட்டிலும் ரெய்டு

மும்பை: நடிகை டாப்சி பன்னு, இயக்குனர் அனுராக் காஷ்யப் உட்பட பல சினிமா பிரபலங்களின் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான பிற இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.வந்தான் வென்றான் உட்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, இந்தி, உட்பட பல மொழிப்படங்களிலும் நடித்தவர் நடிகை டாப்சி பன்னு.  இது தவிர  இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், இந்தி பட இயக்குனர் விக்கிரமாதித்யா, தயாரிப்பாளர்கள் மது மன்தேனா மற்றும் விகாஸ் பாய் ஆகிய 4 பேரும் சேர்ந்து 2011ம் ஆண்டு பான்டம் பிலிம்ஸ் என்ற படக் கம்பெனியை தொடங்கினர். இதன் மூலம் படங்களை தயாரித்ததோடு, வினியோகமும் செய்தனர். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி இந்த கம்பெனியை மூடிவிட்டனர்.

நேற்று நடிகை டாப்சி, அனுராக் காஷ்யப், விகாஸ் பாய் ஆகியோரின் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மும்பையிலும் வேறு இடங்களிலும் இவர்களுக்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று வெவ்வேறு இடங்களில் சோதனையில் ஈடுட்டனர். இந்த சோதனை விபரங்கள் வெளியிடப்படவில்லை. நடிகை டாப்சி, அனுராக் காஷ்யப் மற்றும் பாய் ஆகியோர் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தங்கள் கருத்துக்களை தயங்காமல் வெளியிட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Related Stories: