பூந்தமல்லி: மனைவியை பிரித்து விட்டதாக கூறி சாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் என்ற கோயில் வைத்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கட்டிட தொழிலாளி திருமலை(38), கடந்த 18ம் தேதி ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ராேஜந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், திருமலையை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், திருமலை தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதுடன், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைத்துள்ளார். இதனால், திருமலையின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன், கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.