சென்னையில் நடக்குமா ஐபிஎல்?

சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 2009, 2014ல்  நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், 2020ல் கொரோனா பரவல் காரணமாகவும் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. இப்போது மும்பையில் 2ம் கட்ட கொரோனா அலை அதிகரித்து வருகிறது. அதனால் மும்பைக்கு பதில் வேறு நகரத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.     அதேபோல் கொல்கத்தாவிலும் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல்  மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே  தமிழக தேர்தலுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. இந்த 3 நகரங்களை தவிர  ஐதராபாத், பெங்களூரு, ஜெய்பூர், மொகாலி, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில்  லீக் சுற்றுப் போட்டிகளை நடத்தும் யோசனையில் பிசிசிஐ இருக்கிறது. அதே நேரத்தில் பிளே ஆப் போட்டிகளும், இறுதிப்போட்டியும் கட்டாயம் அகமதாபாத்தில் உள்ள மோடி அரங்கத்தில்தான் நடத்தவேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளதாக  கூறப்படுகிறது. 14வது ஐபிஎல் சீசன் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கப்படலாம்.

Related Stories: