பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது; புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்: பிரதமர் மோடி பேச்சு

புதுச்சேரி: துச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். அப்போது பிரதமரை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் வரவேற்றனர். பின்னர் ஜிப்மர் மருத்துவமனை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 4 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ரூ.2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45-ஏ தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஜிப்மர் காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம்,  சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம், இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினர். இதனை தொடர்ந்து ஜிப்மரில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம், பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த சேமிப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.

திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி; புதிய சாலைகள் மூலம் மக்கள் சனீஸ்வர பகவான் கோயிலுக்கும் நாகூர் தர்காவுக்கும் எளிதாக சென்று வர முடியும். புதிய விளையாட்டு மைதானம் மூலம் புதுச்சேரியில் இளைஞர்கள் விளையாட்டில் திறன் பெற வாய்ப்பு கிடைக்கும். அனைவர்க்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜிம்பர் மருத்துவமனையில் ரத்த ஆய்வு பிரிவு தொடங்கப்படுகிறது. சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் தான் இனி முன்னேறும். இந்தாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும். பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்கள் புத்திசாலிகள், புதுச்சேரி மண் அழகானது. கடற்கரை தான் புதுச்சேரியின் உயிர் நாடி. புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். புதுச்சேரி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவே நான் வந்துள்ளேன். புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள வேளாண் மக்களுக்கு 4 வழிச்சாலை பயனளிக்கிறது.

புதிய 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். தொடர்ந்து பேசிய அவர்; கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம் என்பதை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறமை வெளிகொண்டு வரப்படுகிறது. கிராமப்புற, கடலோர பகுதிகளை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: