இந்தூர் : இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரை பார்க்க சென்ற போது, முன்னாள் முதல்வர் லிப்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராமேஸ்வர் படேல், இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக முன்னாள் முதல்வர் கமல்நாத், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சஜ்ஜன் சிங் வர்மா, ஜிது பட்வாரி ஆகியோர் சென்றனர். இவர்கள் மருத்துவமனைக்கு சென்ற பின்னர், அங்கிருந்த லிப்டை பயன்படுத்தினர். ஆனால், அந்த குறிப்பிட்ட மாடிக்கு சென்ற பின்னர் திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. லிப்டுக்குள் கமல்நாத் உள்ளிட்ட 10 பேர் சிக்கியிருந்தனர். ஒருகட்டத்தில் அந்த லிப்ட் திடீரென 10 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கியது. அதிர்ச்சியடைந்த கமல்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.