பொக்காபுரம் பகுதிகளில் பூத்து குலுங்கும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள்

கூடலூர் : முதுமலை பொக்காபுரம் வனப்பகுதிகளில் தற்போது பிளேம் ஆப் தி பாரஸ்ட் மரங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரவில் அதிக பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயில் அதிகமாக நிலவும் இதன் காரணமாக செடி கொடிகள் காய்ந்த நிலையில், வனப்பகுதி வறட்சியாக காணப்படும்.

இக்காலகட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள பிளேம்ஆப் தி பாரஸ்ட் மரங்களில் பூக்கள் மரங்கள் முழுவதும் பூத்து காணப்படும். வறட்சியான வனப்பகுதியில் செந்நிறமாக காணப்படும் இந்த மலர்கள் தீப்பிழம்புகள் போலக் காணப்படுவதாலும் தொலை தூரங்களில் இந்த மலர்களைப் பார்க்கும்போது காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது போல் காணப்படும். இதனால், வனச்சுடர் என்ற மற்றொரு பெயரும் இம்மலருக்கு உண்டு.

ஜனவரி கடைசியில் துவங்கி பிப்ரவரி மார்ச் மாதங்கள் இந்த மலர்கள் பூப்பதற்கான கால நிலை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மலர்கள் வறட்சியான காலத்தில் பூப்பதால் வறட்சியிலும் பறவைகள், தேனீக்களுக்கு தேவையான தேன் இந்த மலர்களிலிருந்து கிடைக்கின்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த மலர்கள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

Related Stories: