நவீன தொழில் நுட்பத்துடன் குமரியில் ரோந்து வாகனம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோந்து வாகனத்தை எஸ்பி பத்ரிநாராயணன் இன்று தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் இந்த வாகனத்தை இயக்கி வைத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குமரியில் பாதுகாப்பு பணிக்காகவும், குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் புதிய ரோந்து வாகனம் இன்று முதல் செயல்பட உள்ளது. வாகனத்தில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். முக்கிய விழாக்களின் பாதுகாப்பு பணிக்காகவும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தப்படும். இந்த வாகனத்தில் சுழன்று படம்பிடிக்கும் நவீன கேமராக்கள் உள்ளது. ஆகவே சுற்றுவட்டார பகுதிகளில் நடக்க கூடிய நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்ய முடியும்.

உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தவாறு சம்பவ பகுதியை கண்காணித்து உடனுக்குடன் சூழ்நிலைக்கேற்றவாறு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். இந்த வாகனம் கண்காணிப்பு வாகனமாக மட்டுமல்லாமல் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனமாகவும் செயல்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள அகன்ற திரையில் குற்ற நடவடிக்கை தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள், போட்டோக்கள் ஒளிபரப்பு செய்யப்படும். மாலை வேளைகளில் முக்கியமான பகுதிகளில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு கண்காணிப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் குமரி-கேரளா போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட எல்லையில் கேரளாவுக்கு செல்ல தற்போது 39 வழிப்பாதைகள் உள்ளன. இந்த வழி பாதைகளில் இரு மாநில போலீசார் இணைந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குமரியில் இதுவரை 63 வாக்குச்சாவடிகள் பதட்டமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு எத்தனை கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வர உள்ளது என்பது தொடர்பாக இன்னும் முடிவு வில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் டிஎஸ்பி வேணுகோபால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி, இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமாரி, சாயி லட்சுமி உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: