புதிதாக தொழில் தொடங்குபவர்கள் நிறுவனங்களை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: “இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது: ஜனநாயகத்திற்கு சிறந்த நிர்வாகம் தேவை. முந்தைய ஆட்சியில் அரசின் கொள்முதல் குறித்து பல கேள்விகள் இருந்தன. தற்போது, தொழில்நுட்பம் காரணமாக அனைத்திலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. அரசு ஒப்பந்தங்கள் ஆன்லைன் மூலம் ஏலத்துக்கு விடப்படுகிறது.

தொடக்கநிலை (ஸ்டார்ட்-அப்) நிறுவனத்தினர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உத்திகளின் மதிப்பீட்டில் செயல்படுவதோடு மட்டுமின்றி, நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பொருட்களை உலக தரத்தில் தயாரிப்பதன் மூலம், அவர்கள் நூற்றாண்டு கடந்து வாழ முடியும். நாட்டின் பெரும்பாலானவர்கள் இருக்கும் துறையாக தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய தீர்வுகளை ஏற்று கொள்ள மக்கள் தயாராக இருப்பது மிகப் பெரிய வலிமையாகும். தகவல் தொழில்நுட்ப துறையினரின் கூட்டாண்மை சமூக பொறுப்பின் மூலம் நாடு வளர்ச்சி அடைய முடியும். இது இந்தியாவின் மிகப் பெரிய மாற்று சக்தியாக உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: