'அஸ்வின் தான் வர்ராரு விக்கெட் எடுக்க போராரு', 'வெற்றி நடை போடும் தமிழ் மகனே'.. 4-ம் நாள் ஆட்டத்தை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார்.

டெஸ்ட் போட்டிகளில் 29 வது முறையாக ஐந்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலியிடம் ஜோடி சேர்ந்த அஸ்வின் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தை பதிவு செய்தார். சொந்த மண்ணில் சதம் விளாசுவது இதுவே முதல் முறை ஆகும். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தையும் பதிவு செய்தார். ரவிசந்திரன் அஸ்வின் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறை ஆகும். இந்த சாதனையை ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து  119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார். இதனிடையே மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் வெளிப்படுத்திய நடன அசைவை செய்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories: