ஊட்டி: தெப்பக்காடு வனப்பகுதியில் தாயால் கைவிடப்பட்ட நிலையில் நெற்றியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நேற்று காலை வனத்துறை ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய் யானையால் கைவிடப்பட்ட நிலையில் குட்டியானை ஒன்று சுற்றி திரிவதை பார்த்து அதனை மீட்டனர். தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று யானை குட்டியை பார்வையிட்டனர். அப்போது அது பிறந்து 3 மாதமே ஆன ஆண் யானைக்குட்டி என்பது தெரிய வந்தது. நீரிழப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வுடன் இருந்ததும், அதன் நெற்றியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.