விவசாய களத்தில் விவசாயிகளுடன் தோனி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

மும்பை: தோனி தனது பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு தனது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்யும் பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார்.

பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தார். அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். அண்மையில் இங்கு விளைந்த விளைபொருட்களை ஏற்றுமதியும் செய்திருந்தார் தோனி. மேலும், சமீபத்தில் டிராக்டர் ஒன்றை தோனி ஓட்டிய வீடியோ வெளியானது. அத்துடன் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி விளக்கியிருந்தார்.

இதேபோல் மற்றொரு வீடியோவில், தோனி இயற்கை முறையில் தர்பூசணி விதைகளை நிலத்தில் ஒவ்வொன்றாக ஊன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது தோனி தனது பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் தோட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் புன்னகைத்து நிற்கிறார் தோனி.

Related Stories: