கோவை: கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். வரும் 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம்.இதையடுத்து கோவையில் 123 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவான நிலையில், திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.