துறையூர் : துறையூர் அடுத்த பகளவாடியில் பேருந்து நிற்கும் இடம் அருகே உயர் அழுத்த மின் கம்பம் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தினர். அப்போது இந்த மின்கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் அதே இடத்தில் உள்ளது. இந்த மின் கம்பம் தவிட்டுப்பட்டி, ஆதனூர், வெளியூர் செல்லும் சாலையில் உள்ளதால், அவ்வழியே வந்து செல்லும் வாகனங்கள் இந்த மின் கம்பத்தை உரசி கொண்டே செல்கின்றன.
இதுபோல் திருச்சி துறையூர் மெயின் சாலையில் இரண்டடி உள்ளே இருப்பதால் எந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்த சாலை வழியாக மின் துறை அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் பார்த்தும் பார்க்காததுபோல் செல்கின்றனர். எனவே, விபத்துகள் ஏற்படுவதற்குள் இந்த மின் கம்பத்தை மாற்றி அமைத்து தர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.