தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத, இந்தித் திணிப்பை மத்திய அரசு பாஜ அறவே கைவிட வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: “தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து, தேர்ச்சி (பாஸ்) அடைந்தால் மட்டுமே, 6ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்பிற்குச் செல்ல முடியும்” என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சமஸ்கிருதத்திற்குப் பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது” என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது. தமிழ்மொழியை, சொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச்சல், மத்திய பாஜ அரசுக்கு எப்படி, எங்கிருந்து வந்தது.

49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே இல்லை என்ற அவல நிலை; அதிமுக அரசு, பாஜவிடம் கும்பிட்டுக் கூட்டணி வைத்து குழைந்து குழைந்து குற்றேவல் செய்வதால் விளைந்துள்ள விபரீதம் ஆகும்.

தமிழகத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் இல்லை-பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை என்று மதிமயங்கிச் செயல்படும் மத்திய பாஜ அரசு-இந்திப் பேசும் மாநிலங்களில் இது போன்று “இந்தி கட்டாயம் இல்லை”; “இந்தி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம்” என்று சொல்லி விட முடியுமா? மாணவர்கள் தமிழில் தேர்ச்சி (பாஸ்) அடைந்தால் மட்டுமே, 6ம் வகுப்பிலிருந்து 7-ஆம் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்தி பேசும் வட மாநிலங்களில் உத்தரவு பிறப்பித்து விட முடியுமா. ஆனால் அங்கெல்லாம் செய்ய சிறிதும் துணிச்சல் இல்லாத மத்திய பாஜ அரசு-“தமிழ்நாட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டோம் - தமிழாசிரியர்கள் நியமிக்க மாட்டோம்” என்று ஆணவமாகக் கூறுவதற்குக் காரணம், தமிழகமும்-தமிழர்களும் இளிச்சவாயர்கள், ஏமாந்த சோனகிரிகள் என்ற எண்ணமா?

“தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கவும் - கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு-சமஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்ச் செம்மொழிக்கு, “அதிமுக-பா.ஜ. அரசுகள்” கை கோர்த்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது; தமிழகத்தின் எதிர்காலமாம் இன்றைய மாணவ-மாணவியர் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று எடுத்துரைக்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: