வேலூர்: காட்பாடியில் தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் சுமார் 22 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி, லத்தேரி, கே.வி.குப்பம், குடியாத்தம், செங்குட்டை, காட்பாடி ஆகிய பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாக தான் முழுமையாக போக்குவரத்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மேம்பாலம் கனரக வாகனங்களால் வலுவிழந்து, குண்டும் குழியுமாகவும், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 27ம் தேதி சீரமைப்பு பணி தொடங்க இருந்த நிலையில் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் கலெக்டர், எஸ்பி தலைமையில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். மேம்பாலப்பணி நடைபெறும்போது ஒரு மாற்றத்திற்கு அங்கு போக்குவரத்து தடைசெய்ய இருமாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.