பென்னாகரம்: விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் உற்சாகமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள்ளுர் பகுதியில் இருந்து விடுமுறை நாட்களில் திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன்படி விடுமுறை தினமான நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் திரண்டனர். பஸ், கார் மற்றும் டூவீலர்களில் காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் மெயினருவியில் குளித்தும் தொங்குபாலம், முதலை பண்ணை, மீன் காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். இதை தொடர்ந்து ஆலம்பாடி பரிசல் துறையில் இருந்து பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டுகளித்தனர்.