டெல்லி : நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளர்கள் 340 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 2ம் இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அளித்த பதிலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்த போது, 340 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.