பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது அவையில் காங்கிரஸ் எம்.எல்.சி ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத் தொடரில் காங்கிரஸ், பாஜ மற்றும் மஜதவை சேர்ந்த எம்.எல்.சிக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் எம்.எல்.சி பிரகாஷ் ராத்தோடு தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த மீடியாக்கள், செல்போனில் என்ன பார்த்து கொண்டிருக்கிறார் என்பதை ஜூம் செய்தனர். அப்போது, ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை அவர் ரசித்துக் கொண்டிருந்தார். இதை கேமராவில் பதிவு செய்து விட்டனர். தனது செல்போன் கேலரியில் இருந்து ஒவ்வொரு போட்டோவாக காங்கிரஸ் உறுப்பினர் அழித்து கொண்டிருந்த போது, ஆபாச படமும் வந்து விட்டது.