வேடசந்தூர் அருகே நிலா பெண்ணாக 8 வயது சிறுமி தேர்வு செய்து வினோத விழா

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நிலா பெண்ணாக 8 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டு வினோத விழா நடந்தது.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு உலக அமைதி, ஊர் செழிக்க வேண்டி நிலா பெண் தேர்வு செய்து வழிபடுவது வழக்கம். இதற்காக இந்த கிராமத்திலுள்ள சிறுமிகள் பொது இடத்தில் இரவு முழுவதும் அமர வைக்கப்படுவர். எந்த சிறுமி விடியும் வரை தூங்காமல் இருக்கிறாரோ அந்த சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படுவார்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டதில் ரமேஷ்-நவமணி தம்பதியரின் மகள் கனிஷ்கா (8) நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 3 ஆண்டுக்கு நிலா பெண்ணாக இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சிறுமி எல்லையிலுள்ள சரளிமலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலைச்சுமையாக தேவிநாயக்கன்பட்டி எடுத்து வந்தார். ஊர் திரும்பிய சிறுமிக்கு ஊர் மக்கள் தாரை தப்பட்டை முழங்க மக்கல் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாசடச்சியம்மன் கோயிலுக்கு சென்று சிறுமி வழிபட்டார். தொடர்ந்து ஊர் எல்லையில் முறைமாமன்கள் தென்னை ஓலையால் வேய்ந்திருந்த குடிசையில் அமர வைக்கப்பட்டார்.

பின், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் முன்பு சிறுமி அமர வைக்கப்பட்டு கும்மியடித்து சடங்கு செய்யப்பட்டது. இன்று அதிகாலை நிலா மறைய தொடங்கியதும் ஆவாரம்பூ நிரம்பிய கூடையை சிறுமி தூக்கி சென்று அப்பகுதியிலுள்ள வீசினார். தண்ணீரில் மிதந்த பூக்களில் அவர் விளக்கேற்றினார். இந்த விளக்கு தொடர்ந்து 7 நாட்கள் எரியும் என்பது ஐதீகம் ஆகும். 

Related Stories: