முன்னாள் மேயர் ஜாமீன் மீதான விசாரணை ஒத்திவைப்பு: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் மேயர் சம்பத்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் பிப்ரவரி 2ம் தேதி ஒத்தி வைத்தது.

பெங்களூரு கேஜிஹள்ளி, டிஜேஹள்ளியில் கடந்தாண்டு ஆகஸ்ட் 11ம் தேதி நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி பின் சிறையில் அடைத்துள்ளனர்.

தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று நீதிபதி முகமது நவாஜ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசன்னகுமார் வாதிடும்போது, மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை உடனுக்குடன் விசாரணை நடத்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தனி நீதிமன்றத்தை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. அதில் ஏன் இவ்வழக்கை விசாரிக்ககூடாது என்றார். இதை பரிசீலனை செய்வதாக கூறிய நீதிபதி, அடுத்த விசாரணையை பிப்ரவரி 2ம் தேதி ஒத்தி வைத்தார். 

Related Stories: