பெங்களூரு: சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அச்சப்பட தேவை இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளது. சசிகலாவை மருத்துவர்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள் என்ற நம்பகமான தகவல் வந்துள்ளது. மேலும் சில இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் காரணமாக அவளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் தேவையா? இல்லையா? என்பதை மருத்துவர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. சசிகலாவுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனையடுத்து சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன்; அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தற்போது நிலவரப்படி பெங்களூரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மூச்சுத் திணறல் குறைந்து சசிகலா சகஜ நிலையில் உள்ளார். தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் சசிகலாவை மருத்துவமனையிலேயே வைத்து கண்காணிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.