அலிபாபா தலைவர் ஜாக் மா வீடியோவில் தோன்றி பேச்சு: மாயத்துக்கு காரணம் கூறாமல் மவுனம்

பீஜிங்: சீனாவை ேசர்ந்த புகழ் பெற்ற ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, கடந்த அக்டோபரில் ஷாங்காயில் நடந்த நிகழ்ச்சியில்  சீன அரசு, வங்கிகளின் அணுகுமுறை குறித்து கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவரது ஆண்ட் நிறுவனம் புதிதாக தொடங்க இருந்த பல கோடி மதிப்பிலான பங்கு சந்தை நிறுவனத்துக்கு அரசு தடை விதித்தது.

அலிபாபா நிறுவனத்தின் மீது ஏகாதிபத்திய  விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், ஜாக் மா நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தது.  இதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக அவர் பொது வெளியில் தோன்றவில்லை. இதனால் அவர் ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும், சீன அரசு அவரை கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  

இந்நிலையில், தொழிலதிபர் ஜாக் மா திடீரென இரண்டரை மாதங்களுக்கு பிறகு, 50 வினாடிகள் ஓடக் கூடிய ஆன்லைன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது அறக்கட்டளையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டரை மாதங்களாக தான் மாயமானது பற்றியோ, அலிபாபா, ஆண்ட்  நிறுவனங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை. இந்த வீடியோ சீன வர்த்தக செய்தி சேனல்களிலும், இணைய தளங்களிலும் ஒளிபரப்பானது.

Related Stories: