மினி கிளினிக் மருத்துவ பணியாளர் நியமனம் தற்காலிகமாகவே நடைபெறுகிறது: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: மினி கிளினிக் மருத்துவ பணியாளர் நியமனம் தற்காலிகமாகவே நடைபெறுகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை சேர்ந்த வைரம் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் நியமனம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மினி கிளினிக் கொரோனா தொற்று காலத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதற்கான மருத்துவ பணியாளர்கள் நியமனமும் தற்காலிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரத்துறை இயக்ககத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே குழு அமைத்து பணிநியமனம் செய்யப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில், நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது பணி நியமனங்கள் நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: