தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது இருகையூர் கிராமம். இந்த கிராமத்தில் காலனி தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு சுமார் 1 கிமீ தூரம் மண் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். தற்போது வரை இடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. வெயில் காலங்களில் யாரேனும் இறக்க நேரிட்டால் சாலையில் கொண்டு செல்வதற்கு கரடுமுரடான சாலையாக இருந்தாலும் கொண்டு சென்று சேர்த்து விடுவதாகவும், மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக கிடப்பதால் பாதையில் இறந்தவரின் உடலை சுமந்து செல்பவர்கள் மட்டும் இன்றி நடந்து செல்பவர்கள் என அனைவரும் சேற்றில் வழுக்கி விழுந்து புரண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.