ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!

ஜாலோர்:ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென இந்த பேருந்து அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியதில் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 6 பேர் தீயில் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 17 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில், ராஜஸ்தான் ஜலோரில் நடந்த பஸ் விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்துக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், ‘‘ராஜஸ்தான் ஜலோரில் ஏற்பட்ட பஸ் விபத்து செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: