புதுடெல்லி: மேற்குவங்க மாநில முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிராக பாஜக பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், பாஜகவில் சேர்ந்து வருவதால், அம்மாநில பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை மேற்குவங்க பாஜக குழுவினர் சந்தித்தனர். அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்வதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வாக்குச்சாவடி மட்டத்தில் அதிகளவிலான நிர்வாகிகளை நியமிக்கவும், தீவிர பிரசார யுக்தியை கையாளுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.