வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி: 2வது முறையாக நடந்ததால் பொதுமக்கள் பீதி

வேட்டவலம்: வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியானது. இதே ஆட்டுப்பட்டியில் 2வது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வேட்டவலம் அருகே உள்ள ஆளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா.  இவர் 27 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 13ம் தேதி இரவு வழக்கம்போல், ஆடுகளை அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த விஜயா, அங்கு சென்று பார்த்தபோது 9 பெண் ஆடுகள் கழுத்து மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. மர்மவிலங்கு பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்திருக்கலாம் எனத்தெரிகிறது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா வருவாய்த்துறையினருக்கும், கால்நடைத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மதுராம்பட்டு விஏஓ விக்ரம் மற்றும் அண்டம்பள்ளம் கால்நடை மருத்துவர் (பொறுப்பு) ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர், இறந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு செய்ததும் அருகில் உள்ள இடத்தில் புதைத்தனர். மேலும், கடந்த டிசம்பர் 24ம் தேதி விஜயாவுக்கு சொந்தமான இதே ஆட்டுப்பட்டியில் மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் இறந்துள்ள நிலையில், தற்போது 2வது முறையாக 9 ஆடுகள் பலியான சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: