வேட்டவலம்: வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியானது. இதே ஆட்டுப்பட்டியில் 2வது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வேட்டவலம் அருகே உள்ள ஆளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா. இவர் 27 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 13ம் தேதி இரவு வழக்கம்போல், ஆடுகளை அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த விஜயா, அங்கு சென்று பார்த்தபோது 9 பெண் ஆடுகள் கழுத்து மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. மர்மவிலங்கு பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்திருக்கலாம் எனத்தெரிகிறது.