ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பாக செயல்படுகிறோம் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்:அறநிலையத்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்பதில் ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பாக செயல்படுகிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் அலுவலகத்தை திறந்து வைத்தனர். சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்துசமய அறநிலையத்துறை மூலம் அனைத்து கோயில்களையும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகங்கள் நடத்துவதற்கு ஏதுவாக மண்டலங்களை தனித்தனியாக பிரித்து வருகிறோம்.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது தமிழக முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை தனியாரிடமிருந்து மீட்டுள்ளோம். ஏற்கனவே லண்டனிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகள் அனைத்தும் மீட்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘அறநிலையத்துறை மட்டும் அல்லாமல் வனத்துறைக்கு சொந்தமான பல கோடி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதனை சட்டரீதியாக நீதிமன்றம் சென்று மீட்டு வருகிறோம். அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது கூட மன்னிப்பு கிடைக்கும். ஆனால் இப்ப இருக்கிற ஆட்சியில் அணுகுமுறைகள் வேகமாக இருப்பதால் மன்னிப்பு கிடையாது. தண்டனைதான் கிடைக்கும். பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவரை கைது செய்ததே இதற்கு உதாரணமாம்’’ என்றார்.

ஜெயலலிதா வழியில் ஆட்சி, ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி என கூறி வரும் நிலையில் அக்கட்சியின் அமைச்சரே ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பாக செயல்படுகிறோம் என பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: