முதல்வர்களாக இருந்தவர்களில் அதிக கடன் வாங்கியவர் சித்தராமையா தான்: அமைச்சர் நாராயணகவுடா குற்றச்சாட்டு

பெங்களூரு: நாட்டிலேயே அதிகமான கடன் வாங்கிய முதல்வர் யார் என்றால் அது முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் என்று அமைச்சர் நாராயணகவுடா தெரிவித்தார். மண்டியா நகரசபை வளாகத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் நாராயணகவுடா சுவாமி விவேகானந்தா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் செய்து கொடுப்பதில் முதல்வர் எடியூரப்பா முழு கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறார். ஆனால் முன்னாள் முதல்வர் சித்தராமையா மாநிலத்தின் மீது அதிகமான கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.  அவர் முதல்வராக இருந்த நேரத்தில் நாட்டிலேயே அதிகமான கடன் பெற்ற முதல்வர் பட்டியலில் அவர் இருந்தார்.

இதை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்க கடன் பெறுவது வழக்கமானது. இதற்காக கிண்டல் செய்வது சரியில்லை. சித்தராமையா பெற்ற கடன் சுமை தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது.

மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் குறைந்துள்ளது. அப்படியிருந்தும் முதல்வர் எடியூரப்பா எங்களுக்கு தைரியம் கொடுத்து வருகிறார். அதே போல் அரசை எந்த அளவுக்கு முதல்வர் எடியூரப்பா எடுத்து செல்கிறார் என்பதை சித்தராமையா பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனால் என்னுடன் வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும். மைசுகர் சர்க்கரை ஆலை விரைவில் ஆரம்பிக்கப்படும்.  இதற்காக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். புதிய சர்க்கரை ஆலை ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இத்தனை நாட்கள் ஏன் செய்யவில்லை, விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை ஏன் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: