பெங்களூரு: பசுவதை சட்டம் கொண்டுள்ள மாநில அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது விளக்கம் அளிக்கக்கோரி மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பெங்களூரு பில்லண்ணா கார்டன் பகுதியை சேர்ந்த முகமது ஆரீப் ஜமீல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாநிலத்தில் பசுவதை தடை செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் 21வது பிரிவின் கீழ் வாழ்வாதார உரிமைையை பறிக்கும் செயலாகும் மற்றும் வர்த்தகம் நடத்துவோரின் உரிமையை பறிப்பதாகவும் உள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டம் 19 (ஜி) பிரிவின் அடிப்படை உரிமைகள் பறிக்கும் செயலாகவுள்ளது.
பிராணிகள் வதம் செய்வது தடை செய்வதால் இறைச்சி விற்பனை செய்வோர் வேலை இழப்பதுடன் வர்த்தகம் மீது பாதிப்பு ஏற்படுத்தும். மேலும் மக்கள் தாங்கள் விரும்பி சாப்பிடும் உணவு மீதான உரிமையை இழந்து வஞ்சிக்கப்படுவார்கள். ஆகவே அரசு கொண்டுவந்துள்ள தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அம்மனு நேற்று தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா மற்றும் நீதிபதி சச்சின் சங்கர் மகுதம் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அதை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.