வுகானில் கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து சீனாவில் நேரடி கள ஆய்வு நாளை மறுதினம் தொடக்கம்

பீஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி சீனாவில் உலக சுகாதார நிபுணர்கள் குழு நாளை மறுதினம் ஆய்வை தொடங்க உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம்  இன்னும் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு, ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போது பாதிப்பின் வீரியம் சற்று குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவத்  தொடங்கியதுமே அதன் தோற்றம், அதன் செயல்படும் தன்மை, மனிதர்களிடம் பரவிய முறை பற்றி சீனாவில் நேரடி ஆய்வு செய்ய உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இதனால், உலக சுகாதார நிறுவனம் பல முயற்சிகள் மேற்கொண்டும்  இந்த ஆய்வுக்கு சீனா சம்மதிக்காமல் இருந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு ஆய்வுக்குத் தயாராக இருந்த போதிலும், சீனா கால தாமதப்படுத்தி சில காரணங்களை சொல்லி வந்தது. இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம்  வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீனாவில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வுப்பணி நாளை மறுதினம் முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனவரி 14ம் தேதி உலக சுகாதார  நிபுணர் குழு ஆய்வு செய்ய உள்ளது. குறிப்பாக, கொரோனா முதன்முதலில் உருவான வுகான் நகரில் ஆய்வு செய்யப்படும்’ என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.

Related Stories: