பெங்களூரு: நான் யாருக்கும் பயந்து ஓடவேண்டிய அவசியம் இல்லை. மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அழைத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன் என்று நடிகை ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ், பாஜ முக்கிய தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு நெருக்கமானவர் என்று கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட யுவராஜிடம் 75 லட்சம் பெற்றதாக நடிகை ராதிகா குமாரசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து யுவராஜிடம் சி.சி.பி விசாரித்தபோது, ராதிகா மற்றும் அவரது சகோதரன் ரவி ராஜிற்கு 2 கோடி வரை பணம் அனுப்பியதாக கூறினார். இது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதையேற்று நேற்று காலை காலை 10.45 மணிக்கு சாம்ராஜ்பேட்டையில் உள்ள சி.சி.பி அலுவலகம் சென்ற ராதிகா, விசாரணை அதிகாரி நாகராஜ் முன்பு ஆஜராகினார். அப்போது பாஜ பிரமுகர் யுவராஜிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்களை காண்பித்து விசாரித்தனர். அதற்கு சில கேள்விகளுக்கு முறையான பதில் அளித்தார்.