வேலூர்: வேலூரில் உள்ளாட்சி நிதித்தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.04 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கிராம ஊராட்சி, பிடிஓ அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வரவு, செலவுகளை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது புகாரின் பேரில் தணிக்கை செய்வது வழக்கம். இந்த நிலையில், பேரூராட்சி அலுவலக அதிகாரிகளிடம், இருந்து நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு பொருட்கள் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை அந்த அலுவலகத்தை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். பின்னர், அலுவலகத்திற்குள் வாகனங்கள் சென்றதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் போலீசார் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.