பெங்களூரு: நாட்டில் செயல்பட்டு வரும் இளம் குற்றவாளிகள் தொடர்பாக நடத்திய ஆய்வில், கர்நாடகாவில் இளம் குற்றவாளிகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சில சந்தர்ப்ப சூழ்நிலையில் சிறு வயதில் வறுமை, குடும்ப கஷ்டம் போன்ற காரணங்களால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்தால், வழக்கு பதிவு செய்தபின் நீதிமன்ற உத்தரவு பேரில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் 18 வயது நிரம்பியவர்கள் தவறு செய்தால் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கும் குறைவான வயதுள்ளவர்கள் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டாலும், அவர்களை இளம் குற்றவாளியாக கருதி சிறையில் அடைக்காமல் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.