கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை: சாவுக்கு காரணமானவரை விடக்கூடாது என மாணவி உருக்கம்: முகநூல் பழக்கம் தற்கொலையில் முடிந்தது ஏன்?

மணப்பாறை: முன் பின் அறியாதவருடன் முகநூல் வழியாக தொடர்ந்த நட்பால் பட்டம் பெற்று ஊர் போற்றி வாழ வேண்டிய கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த இவருக்கு புதுக்கோட்டை அரசு கல்லூரியில் bsc computer science பாடப்பிரிவு கிடைத்தது. முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த 30-ம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை ஆறுமுகம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மாணவி எழுதி வைத்த ஒரு கடிதம் கிடைத்துள்ளது அதில் தன்னுடைய சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டிருந்தார். இதன் பேரில் போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தினாலும், மாயமான மாணவியை தேடும் பணி மும்முரமானது. அப்போது தான் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து பாக்கியலட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அந்த கடிதத்தில் தனது சாவுக்கு காரணம் பிரியா என்ற பெயரில் எனது மொபைலில் பதிவு செய்துள்ள நம்பரில் உள்ளவன் தான் அவன். அவனை விட்டுவிடாதீர்கள். அவன் மட்டும் உயிரோடு இருந்தால் என்னை போல் ஏராளமான பெண்கள் செத்துவிடுவார்கள் என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியை  சேர்ந்த ராமராஜ் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் துலுக்கர்பட்டிக்கு சென்று ராமராஜை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பாக்யலட்சுமியிடம் முகநூல் மூலம் பழகி அந்த பெண்ணின் புகைப்படத்தை பெற்று ஆபாசமாக சிற்றறித்து முகநூலில் பதிவிடுவதாக கூறி மிரட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். இது போன்று ஏதும் செய்ய வேண்டாம் என்று பாக்கியலட்சுமி கண்ணீர் விட்டு கதறியும் ராமராஜ் தொடர்ந்து மிரட்டியதால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபோல மேலும் பல பெண்களை ராமராஜ் தன் வலையில் வீழ்த்தியது கண்டறியப்பட்டுள்ளது. அவரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து பார்த்த போது அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ராமராஜை போக்சோ, தடயங்களை அளித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவம், நாகர்கோவில் காசி, தற்போது ராமராஜ். பெண்களிடம் அத்துமீறும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: