வாஷிங்டன்: அதிபர் தேர்ல் முடிவை மாற்றுமாறு ஜார்ஜியா தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்த ஆடியோ பதிவுகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். வரும் 20ம் தேதி பதவியேற்கவும் தயாராகி வருகிறார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஜார்ஜியா மாகாண தலைமைத் தேர்தல் ஆணையரிடம் பேசியுள்ளார் டிரம்ப். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது. அதில் தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் டிரம்ப் பேசி உள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியான பிராட் ரபென்ஸ்பெர்ஜருடன் டிரம்ப் பேசியதை ஒட்டுக் கேட்டதுடன் பதிவும் செய்யப்பட்டுள்ளது.