மக்களின் அறிவை வளர்க்க 4,000 அறிவியல் இதழ்களின் சந்தாவை பெற அரசு முடிவு

புதுடெல்லி:  அறிவியல் அறிவு மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, ‘ஒரே தேசம். ஒரே சந்தாதாரர்’ என்ற கொள்கையை வகுத்துள்ளது. இதன்படி, உலகத்தில் உள்ள அனைத்து அறிவியல் சம்பந்தப்பட்ட ஆய்வு கட்டுரைகள் வெளியாகும் இதழ்களை பெறுவதற்காக, மொத்தமாக சந்தாதாரராகும் திட்டத்தை அமல்படுத்த  முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலகளவில் வெளியாகும் புதிய ஆராய்ச்சி கட்டுரைகள், கண்டுபிடிப்புகள், ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை மக்கள் அனைவரும் இலவசமாக பெற இயலும்.   புத்தாண்டை முன்னிட்டு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கொள்கை குறித்து வெளியிடப்பட்ட வரைவுக் கொள்கையில் இந்த திட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு இதழ்கள், பத்திரிக்கைகள் உள்ளன. இவற்றின் மொத்த சந்தாவையும் பெறுவதற்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாயை செலவிட வேண்டி இருக்கும். இந்த அறிவியல் ஆய்வு இதழ்களின் விலை, சந்தாவானது மிக அதிகம் என்பதால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட குறிப்பிட்ட சில இதழ்களை மட்டுமே வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: