கவர்னரை கண்டித்து 8ம் தேதி முதல் போராட்டம் எந்த விளைவையும் எதிர்கொள்ள தயார்: முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கமிட்டி அறையில் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில்  புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று ஒரு சிலர் டிவிட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்டாலும் கூட, எங்களுடைய அரசு உறுதியாக இருந்து புத்தாண்டை கொண்டாடியது. 10 மாத காலம் கொரோனா பிடியில் இருந்த மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு  கொண்டாடியதை என்னால் கண் கூடாக பார்க்க முடிந்தது.  சுற்றுலா பயணிகள் வந்தால்தான் ஓட்டல், நகை, துணி கடைகளில் வியாபாரம் பெருகும். வியாபாரிகளுக்கு வருமானம், வேலைவாய்ப்பு உருவாகும்.  ஒரு சிலரின் நடவடிக்கை எல்லாம், மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக் கூடாது. எல்லா திட்டங்களையும் முடக்க வேண்டும். காலதாமதப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்கக் கூடாது. உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறக் கூடாது, என அன்றாட தலையீடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொல்லைகள் நீங்குகிற ஆண்டாக 2021 இருக்க வேண்டும்.

இந்திய நாட்டில் ஜனநாயகத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதை மத்தியில் உள்ள மோடியும், புதுவையில் உள்ள பேடியும் கடைபிடிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், முதல்வர் நாராயணசாமியிடம் கவர்னரை கண்டித்து 8ம் தேதி முதல் போராட்டம் அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, `இது அரசியல் கட்சிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். என்னை அழைத்தால் போராட்டத்திற்கு செல்வேன். இதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்’ என்றார்.

Related Stories: