சேதமடைந்த பேருந்து நிறுத்தம் மதுக்கூடமாக மாறிவரும் அவலம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே நெல்லியடிக்காடு கிராமத்தில் சேதமடைந்த பேருந்து நிறுத்தம் மதுக்கூடமாக மாறி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நெல்லியடிக்காடு கிராமத்தில் பழமைவாய்ந்த பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் மேல்பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி மேல் பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பயணிகள் யாரும் இந்த பேருந்து நிறுத்தத்தை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை.

இதனால் இப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதால் மதுக்கூடமாக மாறியுள்ளது. பல்வேறு முறை இந்த பேருந்து நிறுத்தத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பேருந்து நிறுத்தம் அமைத்துத்தர அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித பயனும் கிடையாது. பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி மது அருந்துவதால் அந்த வழியாக செல்லக்கூடிய பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே சேதமடைந்த பேருந்து நிறுத்தத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: