ஊட்டி: கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை வந்த நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை நாட்கள் என 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்த நிலையில், இந்த விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் முதலே ஊட்டிக்கு வர துவங்கினர். கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் இ-பதிவு முறையில் பதிவு செய்து விட்டு ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக கடந்த இரு நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.